Tuesday, March 17, 2015

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம்

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை 
தெரிந்துகொள்வோம் ...!

 சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக 
விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் 
இணைவு தான்...
 சிறுதுளி பெருவெள்ளம் என்பது 
போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை 
பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...

 அப்படி இணைந்த 
கிராமங்களின் பெயர்கள் உருவானதின் 
பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான 
ஒன்றே...

 * 108 சக்தி ஸ்தலங்களில் 51வது 
ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் 
ஊர் என்று அழைக்கப்பட்டு, 
பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...

 * Armoured Vehicles And 
Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...

 * chrome leather factory 
இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் 
இப்பகுதி குரோம்பேட்டை என 
அழைக்கப்படலாயிற்று...

 * 17,18ம் நுற்றாண்டுகளில் 
நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. 
அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் 
நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று 
உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் 
அதுவே கோடம்பாக்கமாக மாறியது...

 * மகப்பேறு என்பதே 
மருவி முகப்பேர் ஆனது...

 * தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. 
ஆகையால் தென்னம்பேட்டை என 
பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது 
தேனாம்பேட்டையாக மாறிப்போனது...

 * சையிது ஷா பேட்டை 
தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...

 * முற்காலத்தில் 
வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது 
தற்போதைய வேளச்சேரி...

 * உருது வார்த்தையான che bage (six gardens 
என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து 
உருவானது தான் சேப்பாக்கம்...

 * சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் 
சுருக்கமே பாண்டி பஜார்...

 * கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. 
நகர் என அழைக்கிறோம்...

 * சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் 
அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, 
பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் 
எப்படியோ மாம்பலமாகி விட்டது...

 * பல்லவர்கள் ஆட்சி செய்ததால் 
பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட 
இடம் தான் பல்லாவரம்...

 * சென்னை மாகாண முதல்வராக இருந்த 
பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என 
அழைக்கப்படுகிறது...

 * நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் 
செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் 
என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...

 * புரசை மரங்கள் மிகுதியாக 
இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி 
புரசைவாக்கம் ஆனது...

 * அதிக அளவில் மல்லிகை பூக்கள் 
பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி 
ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை 
பறித்துக்கொண்டு சென்று காஞ்சி 
வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் 
சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி 
என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக 
மாறியது. வல்லி என்பது தெய்வத்தை 
குறிக்கும் ஒரு பெயர்...

 * 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த 
ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த 
ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என 
அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய 
தண்டயார்பேட்டை...

 * முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் 
திறந்தவெளியாக இருந்துள்ளது. 
அதனாலேயே மந்தைவெளி 
என்றழைக்கபடுகிறது...

 * மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் 
என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...

 * பல்லவர்கள் காலத்தில் போர்கள் 
நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், 
இப்பகுதி போரூர் எனப்படுகிறது...

 * சில நூறு வருடங்களுக்கு 
முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் 
மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...

 * திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா 
திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...

 * பார்த்தசாரதி கோவிலின் 
எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் 
பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என 
பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, 
தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...

 * தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் 
செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் 
மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே 
இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...

 * வள்ளி சேரி பாக்கம் 
என்பதே மருவி பின்னால் 
வளசரவாக்கம் என மாறியது..!

No comments:

Post a Comment